செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ’ யை!


முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ’ யை!

ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்கிற, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே புள்ளியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்ற அழைக்கிற அளவிற்கு இதுவரை ஒரு கட்டுரையும் எழுதப்பட்டதில்லை. ஆனால், முத்துக்குமாரின் கட்டுரை வடிவில் அமைந்திருக்கிற அந்த நான்கு பக்கக் கடிதம், அதை செய்திருக்கிறது. அதை நிரூபித்தது போல், அவரின் எழுச்சிமிகு இறுதி ஊர்வலத்தில் பல்வேறு இயக்கங்களும், மக்களும் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை எழுச்சியோடு பதிவு செய்தனர். ஈழத்தமிழர்களுக்காக ‘முத்துக்குமார் நடத்திய அந்த எழுச்சிமிகு அணிவகுப்பில்‘ கலந்துக் கொண்டதை, என்னுடைய தகுதியாக, என் அரசியல் நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தா ஒன்றாக, மிகப் பெருமையோடு கருதுகிறேன். ஏனோதானோ என்றோ, அல்லது தன்னைப் பெரிய அறிவாளியாக, எழுத்தாளனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றோ பல மேற்கோள்களைக் காட்டி, படிப்பவனை மிரட்டி நானூறு பக்கங்களுக்கும் மிகாமல், ‘பெரும் குறிப்பு‘ வரைகிற எழுத்தாளர்கள் மத்தியில், நான்கே பக்கத்தில், தனது முதல் எழுத்திலேயே, வெறும் துண்டு பிரசுரத்தில் ஓர் இரவுக்குள் தமிழகத்தையே தலைகீழாகப் புரட்டி விட்டார் முத்துக்குமார். தான் கொண்ட கொள்கையின் மீது அர்ப்பணிப்பும், உண்மையும், துணிவும், தியாக உள்ளமும் இருந்தால், நானூறு பக்கங்கள் அல்ல, நாலே வார்த்தையில் கூட மக்களை தட்டி எழுப்ப முடியும் என்பதற்கு முத்துக்குமாரின் ‘உயில்‘ ஒரு சாட்சி. நமக்கு பாடம். *** அரசியல் அலசல் கொண்ட கட்டுரையை, கடிதத்தை மிகச் சிறப்பாக எழுதுவது, முயன்றால் எல்லோருக்கும் முடிகிற காரியம்தான் என்றாலும், மரணத்தை முடிவு செய்துவிட்டு, எழுதச் சொல்லுங்கள், அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும், அவருக்கு ஒண்ணாவது வாய்பாடைக் கூட ஒழங்காக எழுதவராது. தாய்நாட்டிற்காக, மரணத்தைக் கண்டு அஞ்சாத அந்தச் சிறப்பு இந்திய வரலாற்றில் மாவீரன் பகத்சிங்கிடம் இருந்தது. மறுநாள் காலையில் தூக்கு, இரவு லெனின் ‘அரசும் - புரட்சியும்‘ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறார் பகத். சிறைக்காவலர், “மன்னிப்பு எழுதிக் கொடுத்தால், தூக்கிலிருந்து தப்பலாமே” என்கிறார். பகத்சிங் சொல்கிறார், “என் மரணத்தைப் பார்த்து லட்சக் கணக்கான இளைஞர்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக போராட வருவார்கள். என் மரணம் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டு பண்ணும். அதற்காகவே நான் தூக்குகயிறை முத்தமிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தீவிரமாக லெனின் ‘அரசும் - புரட்சியும்‘ என்ற நூலைப் படித்திருக்கிறார் பகத். முத்துக்குமாரின் மிகச் சிறப்பும், பகத்சிங்கைப் போன்றே மரணத்தை மயிறளவுக்கூட மதிக்காததன்மைதான். தன் மரணத்தை முடிவு செய்துவிட்டு, மிகப் பெரிய அரசில் தீர்வை அலசி ஆராய்ந்து ஒவ்வொரு வார்த்தையிலும் நெருப்பு வைத்து எழுதியிருக்கிறார் தமிழகத்து பகத்சிங் முத்துக்குமார். அவர் வைத்துக் கொண்ட நெருப்பைவிடவும் அவர் வைத்த நெருப்பு, லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நெஞ்சில், ‘திகுதிகு‘ வென்று பற்றி சூராவளியாய் தமிழகம் முழுக்க சுற்றி அடிக்கிறது. தோழர்களே, முத்துக்குமாரின் அந்த நான்கு பக்க தீபந்தம், நம் கையில் இருக்கிறது. அந்த மாவீரன், மாமேதை முத்துக்குமார் நமக்கு வழிகாட்டிச் சென்றிருப்பது, நம்மை வருத்திக் கொள்ள, கொளுத்திக்கொள்ள அல்ல. தமிழனப் பகையை வருத்த, கொளுத்த. ஆம் தோழர்களே, முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ‘ யை. அந்தத் ‘தீ‘ ஈழத்தமிழர்களுக்கு எதிரான, தமிழனத்திற்கு எதிரான, வஞ்சிக்கப்படும் மக்களுக்கு எதிரான சதியைப் பற்ற வைப்பதற்காக மட்டுமே நமக்கு பயன்பட வேண்டும். அது ஒன்றுதான் முத்துக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான வீர வணக்கம். -வே. 

மதிமாறன்

வலைப்பதிவு காப்பகம்