ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

குடியரசு நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது

27 - குடிஅரசு தொகுதிகளையும் - 'ரிவோல்ட்' ஆங்கில வார ஏட்டில் வெளி வந்த முக்கிய கட்டுரைத் தொகுப்புகளையும் - பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஆகஸ்ட் 26- ஆம் தேதி மேட்டூர் அணையில் வெளியிடப்பட்டது. பெரியார் பேச்சு எழுத்துகளை தொகுத்து வெளியிடும் முயற்சிகளில் கடந்த 2003 -ஆம் ஆண்டு முதல் பெரியார் திராவிடர் கழகம் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே 3 - தொகுதி களை வெளியிட்டு முடிந்த நிலையில், இப்போது மேலும் ஏராளமான, விடுபட்டுப் போன பெரியார் எழுத்து சிந்தனைகளைத் தேடிப் பிடித்து அவைகளைத் தொகுத்து 27 - தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. பெரியாரின் 'குடிஅரசு'க்கு அரசு நெருக் கடி வந்த போது, 'புரட்சி', 'பகுத்தறிவு' ஏடுகளையும் பெரியார் நடத்தினார். அப்படி 'பகுத்தறிவு' வார ஏட்டை பெரியார் தொடங்கிய நாள் 26.8.1934 ஆகும். எனவே வரலாற்றுக் குறிப்புள்ள நாளான ஆகஸ்டு 26 ஆம் தேதியிலேயே 'குடிஅரசு' - ஷரிவோல்ட்' உள்ளிட்ட 28 தொகுதிகளை யும் (1925 முதல் 1938 வரை) கழகம் வெளியிட முடிவு செய்தது. வெளியீட்டு விழா, மேட்டூரில் ஆகஸ்டு 26 - அன்று பகல் 11 - மணியளவில் நடைபெற்றது. குடிஅரசு, ரிவோல்ட் தொகுப்புகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, மேட்டூர் கழக ஆதரவாளரான தோழர் இரா. நல்லத்தம்பி பெற்றுக் கொண்டார். மேட்டூர் தோழர் இரா. நல்லத்தம்பி குடி அரசு வெளியீட்டுக்காக ஆர்வத்துடன் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டு விழாவில், கழகத்தின் பொதுச் செயலாளர்கள் கோவை இராம கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், சேலம் மாவட்டக் கழகத் தலைவர் மார்ட்டின், மாவட்ட செயலாளர் சக்திவேலு, அமைப்பாளர் முல்லைவேந்தன், சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி. குமரன், திண்டுக்கல் தாமரைக் கண்ணன், திருப்பூர் இராவணன், குடிஅரசு தொகுப்பு பணி களின் ஒருங்கிணைப்பாளர் ப.தமிழ்க்குரிசில் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். வெளியிடப்பட்ட குடிஅரசு, ரிவோல்ட் தொகுப்புகள் விற்பனைக்கு - முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை உடனே அரசுடமையாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியாரின் குடியரசு நூல் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதாக அறிவித்தது உடனே பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் அறிவுசார் சொத்துடமை யாரும் வெளியிடக்கூடாது அப்படி வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என மிரட்டி அறிவிப்பை வெளியிட்டார் திராவிடர் கழகத்தலைவர் வீ.ரமணி வீரமணியின் இந்த செயலைக் கண்டித்தும். பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை உடனே அரசுடமையாக்கக் கோரியும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று[5-08-2008] திங்கள்கிழ்மை நாடெங்கிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை தாங்கினார் ஆதித்தமிழர் பேரவையின் இளைஞரணிச் செயலாள்ர் நீலவேந்தன்,பெரியார்திராவிடர்கழக மாவட்டத்தலைவர் துரைசாமி,தென்மொழி துரையரசனார், அகிலன்,முகில்ராசு,சரவணமூர்த்தி,பல்லடம்விஜயன் உட்பட பலர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

எனது கடமை

தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துக்களைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக் கொள்ளா விட்டாலும் நாளை ஒரு நாள் ஏஏற்றுக்கொள்ளும் நிலை வரும். இக்கருத்துக்களை சொல்லும் நிலையில் நான்தான் இருக்கிறேன். சொல்ல வெண்டிய கருத்துக்களை நானே எழுதி,நானே அச்சுக்கோத்து, நானேஅச்சிட்டு, நானே படித்துக்கொள்ளும் நிலைக்குப் போனாலும் குடியரசை வெளியிட்டு என்கருத்துக்களை வரும் தலை முறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை. [குடியரசு-10.06.1929]
-தந்தைபெரியார்

புதன், 20 ஆகஸ்ட், 2008

எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும்

எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக் காட்டுகிறது.
இனியும் நாங்கள் தயங்கி நிற்கத்துணியமாட்டோம்.
நாங்கள் எங்கள் கொடியை உயர்த்தி விட்டோம்.
அந்தக்கரங்களை கீழே இறக்கமாட்டோம்.
எங்கள் கரங்கள் முறியடிக்கப்பட்டு புழுதிக்குள் புதையுண்டாலொழிய...
எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும்.
இனி சமரசம் என்ற பேச்சே இல்லை.
எங்கள் நியாயங்களுக்கு செவிகள் காது கொடுத்தேதீரும்.
-ரிவோல்ட் [3-11-1929]

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2008

சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு செய்வது இலேசான காரியம் அல்ல கடவுள்தொண்டு, தேசத்தொண்டு என்பவைகளை யாரும் செய்யலாம். சமுதாயத் தொண்டு செய்வது சிறுமைக்கும்,எதிர்ப்புக்கும், மானஅவமானத்திற்கும் உரியதானதால் யாரும் இத்தொண்டிற்கு முன் வருவது கிடையாது.
-தந்தைபெரியார்

சனி, 16 ஆகஸ்ட், 2008

பெரியார் கொள்கை யாருக்குச் சொந்தம்?

தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்தனையும் அவரால் 1935-ல் உருவாக்கப்பட்டு, 1952-ல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும். இவற்றை அச்சில் வெளியிட்டு விளம்பரமும் வருவாயும் தேடத் தனிப்பட்ட சிலரும் சில இயக்கங்களும் பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரியவருகிறது! அப்படிச் செய்வது சட்ட விரோதமாகும். மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலிநாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.' - ஒரு முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெயரில் விடுதலை ஏட்டில் வெளிவந்துள்ள இந்த விளம்பரம் தமிழகத்தில் பெரியார் பற்றாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சொற்களிலேயே கூற முயன்றால், இப்படியொரு பூனை என்றாவது குதித்தோடி வெளியே வரும் என்பதால்தான் பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்றொரு கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுவரையிலும் தலைவர்கள், எழுத்தாளர்கள் என எத்தனையோ பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கி மக்களுக்குப் பொதுவாக்கிப் பெருமைப்படும் தமிழக அரசு, பெரியார் விஷயத்தில் மட்டும் கண்டும் காணாமலேயே நடந்துகொண்டு வருகிறது. இத்தனைக்கும் பெரியாரின் பெயரைச் சொல்லித்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கங்கள் தமிழகத்தை ஆண்டுவருகின்றன.
பெரியாரை முழுவதுமாகவும் முறையாகவும் பயிலக் கூடியதாகத் தற்போது நல்ல நூல்கள் எதுவும் இல்லை. 1970களின் தொடக்கத்தில் 2200_க்கும் அதிகமான பக்கங்களில் மூன்று தொகுதிகளாகச் சிந்தனையாளர் கழகத்தால் வெளியிடப்பட்ட `பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள்' என்ற நூல் மட்டுமே குறிப்பிடத்தக்கது. தற்போது மிக அபூர்வமாகச் சிலரிடமே இருக்கும் இந்த நூலும் பார்க்கக் கிடைத்தாலே பெரிய விஷயம்.1924 தொடக்கம் பெரியாரின் பேச்சும் எழுத்தும் அச்சில் வரத் தொடங்கியுள்ளன. நவசக்தி, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு, குடி அரசு, விடுதலை, திராவிடன், ஜஸ்டிஸ், உண்மை, மாடர்ன் ரேஷனிஸ்ட், சண்டமாருதம், புதுவை முரசு, நகரதூதன், திராவிட நாடு, தனி அரசு, பொன்னி உள்பட பல இதழ்களில் அவருடைய எழுத்துகள் வெளிவந்திருக்கின்றன. ஏராளமான சிறுநூல்கள், சுமார் 80 ஆண்டுகளாக, அவர் இருந்தபோதும் இறந்தபிறகும் வந்திருக்கின்றன. ஆனால், இவற்றில் மிகக் குறைந்த அளவே பிறகு சிறந்த நூல்களாக உருப்பெற்றிருக்கின்றன.பெரியாருடைய கருத்துநிலைகளேகூட காலந்தோறும் புதுப்புது மாற்றம் கண்டுவந்திருக்கின்றன. ஆண்டு வரிசைப்படி இவையனைத்தும் தொகுக்கப்பட்டு, வாசிக்கக் கிடைத்தால் அவரை அனைவரும் செம்மையாகப் புரிந்துகொள்ளவும் முடியும்.
மகாத்மா காந்தியின் பேச்சுகளும் எழுத்துகளும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக அவற்றை நூறு தொகுதிகளாகக் குறைந்த விலையில் ஆங்கிலத்தில் மத்திய அரசின் வெளியீட்டுத் துறை வெளியிட்டிருக்கிறது. மராட்டிய அரசின் முயற்சியில் அம்பேத்கரின் எழுத்தும் பேச்சும் விவாதங்களும் ஆங்கிலத்தில் 18 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் பிற மொழிகளிலும் பெயர்த்து வெளியிடப்படுகின்றன. இதன் 38 தொகுதிகள் தமிழிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவற்றைப் படித்தால், மகாத்மாவையும் அம்பேத்கரையும் படிக்க வேறெதையும் தேட வேண்டியதில்லை.
பெரியாருடைய பேச்சும் எழுத்தும் மட்டும் சுமார் எழுபத்தைந்தாயிரம் பக்கங்கள் இருக்கும். இவை ஏறத்தாழ நாற்பது இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இப்போதும் இவையெல்லாம், பெரியார் திடல் உள்பட எங்கெங்கோ விரவிக் கிடக்கின்றன என்று பகுத்தறிவாளர்கள் குறிப்பிடுகின்றனர். எழுநூற்றைம்பது பக்கங்கள் வீதம் நூறு தொகுதிகளில் முழுத் தொகுப்பையும் கொண்டுவருவதென பெரியார் மறைவுக்குப் பின், 1976_ல் தஞ்சையில் நடந்த பெரியார் சுயமரியாதை இயக்கப் பொன்விழாவின்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
1983-ல் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டது மட்டுமே பதினைந்தாயிரத்து எண்ணூறு பக்கங்கள். தொகுத்து 25 ஆண்டுகளாக `ஊறவைக்கப்பட்டிருக்கும்' இவற்றைத்தான் தற்போது முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் வெளிக்கொணரப் போவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்துதான் திராவிடர் கழகத்தின் `விடுதலை' நாளிதழில் முதல் பாராவிலுள்ள அறிவிப்பு.இரு ஆண்டுகளுக்கு முன், பெரியார் பேச்சையும் எழுத்தையும் நாட்டுடைமையாக்குவதுடன் கால வரிசைப்படித் தொகுத்துப் பதிப்பிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, `அப்படியென்றால் பெரியார், யார் உடைமை?' இன்னமுமா, நாட்டுடைமையாக்கப்படவில்லை?' என்ற வியப்பே பலரிடமும் மேலோங்கியது. தொடர்ந்து, பல்வேறு இதழ்களிலும் இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அரசோ கடைசி வரையிலும் எதுவும் தெரியாதது போலவே மௌனம் காத்தது.
பெரியாரின் பேச்சையும் எழுத்தையும் நாட்டுடைமையாக்க தமிழக அரசு முன்வருமேயானால், பெரியாரால் உருவாக்கப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் நிச்சயம் அதற்குத் தடையாக இருக்காது; கைமாறாகப் பெரும் பணத்தைக்கூட எதிர்பார்க்காது. சென்னையில் வரும் செப்டம்பர் 6, 7 தேதிகளில் பகுத்தறிவாளர் மாநாடு நடைபெறுகிறது. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் விதத்தில் முதல்வர் கலைஞர் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறார்கள் பெரியார் பற்றாளர்கள். (பெரியார் எழுத்துகளை அரசுப் பயன்பாட்டிலும் கல்விக்கூடங்களிலும் கொண்டுவந்தது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். என்பது இந்த இடத்தில் நினைவுகூரத் தக்கது.)
பெரியாரின் சொத்துகளுக்கு யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம். அவருடைய கருத்துகளுக்குமா?
வீரமணிதான் ஓரே வாரிசா?
`விடுதலை' ஏட்டில் வெளியான அறிவிப்பு குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர்கள் என்ன நினைக்கிறார்கள்? இது பற்றி அவர்களிடம் பேசினோம்.

கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகத் தலைவர்):
``வீரமணியின் இந்த அறிவிப்புக்குக் காரணம். வரும் செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் குடி அரசு இதழைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கிவிட்டோம். இதனால் எதிர்காலத்தில் தனக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்று அஞ்சித்தான் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்டவர் பெரியார். ஆனால், அவரைப் பற்றிச் சொல்லக்கூடிய மிகப் பெரிய புத்தகங்கள் இல்லை. எனவேதான், 1925-ம் ஆண்டில் இருந்து 49-ம் ஆண்டு வரை வெளிவந்த குடி அரசு இதழில், 38-ம் ஆண்டு வரையிலான இதழ்களைத் தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்நிலையில், வீரமணியின் அறிவிப்பு வினோதமாக உள்ளது. வழி வழியாக வந்த தனது சொத்துக்களை மக்களுக்காகக் கொடுத்தவர் பெரியார்.
73-ம் ஆண்டு பெரியார் இறக்கும் தறுவாயில் அவரிடம், `உங்களின் அடுத்த வாரிசு யார்?' என்று கேட்டதற்கு, `எனது கொள்கையும், கருத்தும்தான் வாரிசு' என்றார். குடி அரசு இதழில் வெளியான கருத்துக்களுக்கு `நாங்கள்தான் வாரிசு' என்று உரிமை கொண்டாடுவது எப்படிச் சரியாகும்? அறிவுசார் சொத்துடைமை என்ற பெயரில் பெரியாரின் கருத்துக்கள் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது லாப வெறி நோக்கத்தைத்தான் காட்டுகிறது. பெரியார் ஒருபோதும் தன்னுடைய கருத்துக்களுக்கு காப்புரிமை வைத்தது கிடையாது.'''

.
ராமகிருட்டிணன்(பெரியார் தி.க பொதுச் செயலாளர்) :
"குடி அரசு இதழைத் தொகுத்து வெளியிட கடந்த 26 வருடங்களாக வீரமணி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தக் கட்டுரைகளைத் தொகுத்த தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்திடமிருந்து ஒரு பிரதியைப் பெற்று நாங்கள் வெளியிடுகிறோம். வே.ஆனைமுத்து தொகுத்ததைத் தவிர, இதுவரை பெரியாரைப் பற்றி வெளிவந்தது எல்லாமே ஐந்து ரூபாய், பத்து ரூபாய் புத்தகங்கள்தான். பெரியார் தன்னுடைய கருத்தை எப்பொழுதுமே பெட்டிக்குள் வைத்துப் பூட்டியது இல்லை. பெரியாரின் கருத்துக்கள் மக்களிடம் பரவலாகப் போய்விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் வீரமணி. எல்லாத் தலைவர்களின் நூல்களும் அரசுடைமையாக்கப்படும்போது, பெரியாரின் நூல்கள் அரசுடைமையாக்கப்படுவதைத் தடுத்தவர்தான் வீரமணி. தற்போது இவர் கொடுத்த அறிவிப்பால், நாளை பெரியாரின் சிறு புகைப்படத்தைக் கூட யாரும் வெளியிட முடியாத சூழல்தான் நிலவும். இவர் நீதிமன்றத்தில் தொடுக்கப் போகும் வழக்குக்காக நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.''


குமாரதேவன்(பெரியார் தி.க ஆட்சிமன்ற உறுப்பினர்):
``25-ம் ஆண்டு குடி அரசு பத்திரிகையில் வெளியான பெரியாரின் கட்டுரைகளுக்கு இவர்கள் காப்புரிமை எதையும் வாங்கவில்லை. 52_ம் ஆண்டு அறக்கட்டளையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில், 2001-ம் ஆண்டு சட்டப்படியாக வந்த அறிவுசார் சொத்துடைமைக்குள் இவை அடங்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? பெரியாரின் கொள்கையைப் பரப்ப இவருக்கு மட்டும் லைசென்ஸ் கொடுத்தது யார்? இவர்தான் ஒரே வரிசா? நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை.'''

பேராசிரியர் நெடுஞ்செழியன் (குடி அரசு இதழைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவர்):
``தஞ்சை தோழர் ரத்தினகிரி தலைமையில் நாற்பது பேர் 1982-ம் ஆண்டின் கோடை விடுமுறையில் திருச்சி காஜாமலை பெரியார் மணியம்மை பள்ளி வளாகத்தில் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வீதம் உழைத்து அவற்றைப் பிரதியெடுத்தோம். எழுதியவர்களுக்கான உணவுச் செலவை அந்தக் கல்வி வளாகத்தின் செயலாளரான புலவர் இமயவரம்பன் ஏற்றுக் கொண்டார். எழுதுபொருள், மை, கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாள் ஆகியவற்றுக்கான செலவை ரத்தினகிரி ஏற்றுக் கொண்டார். இதற்காகத் தனது பொதுவைப்பு நிதியில் இருந்து அவர் செலவு செய்தார். ஏறத்தாழ 15,835 பக்கங்கள் அப்படி எழுதப் பெற்றன. நண்பர் ரத்தினகிரியும், தஞ்சை பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் என்ன நோக்கத்திற்காக இவ்வளவு பெரிய இழப்புகளை ஏற்றுக் கொண்டார்களோ, என்னைப் போன்றவர்கள் என்ன நோக்கத்திற்காகப் பாடுபட்டோமோ அந்த நோக்கங்கள் தடைபட்டுப் போய்விடக் கூடாது.''

தஞ்சை ரத்தினகிரி (குடி அரசைத் தொகுத்தவர்களில் ஒருவர்):
``பெரியாரின் கருத்துக்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்த நூற்றாண்டுக்கு, உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான கருத்து. இன்றைக்கு நிலவும் அமைதியற்ற சூழலில் இந்தக் கருத்துக்கள் தேவை. சுதந்திரம் என்பது என்ன? ஒவ்வொரு மனிதனும் அச்சத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டும். அந்த அச்சத்தை நீக்கிய வாழ்வு என்பதுதான் பெரியாரியல். அதைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்பதால்தான் எழுதினோம். அதற்கு வாய்ப்பு அமையவில்லை. இப்போது (கொளத்தூர்) மணி அதைச் செய்கிறார். அதற்குத்தான் வீரமணி அப்படிச் சொல்லியிருக்கிறார். இருந்தாலும், மணி அதைக் கொண்டு வந்துவிடுவார் என்று நினைக்கிறேன், விரும்புகிறேன், ஆசைப்படுகிறேன். இது ஓர் அறிவுசார் இயக்கம். அறிவுசார் இயக்கத்தில் அறிவுக்குத் தடை இருக்கக்கூடாது. ஆனால், என்ன செய்வது? அந்த மாதிரி ஆகிவிட்டது. பெரியார் இயக்கத்திலேயே எத்தனை விதமான பிளவுகள்? உலக மனித சமூகம் ஒருமைப்பட வேண்டும் என நினைத்தவர் பெரியார். அதனால் அந்தப் பிளவுகள் நீங்கி, பெரியார் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.''
விடுதலையில் வெளியான அறிவிப்பு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விடை தேடி பெரியார் திடலுக்குச் சென்றோம். நாம் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை நேரடியாகச் சந்தித்தோம். நமது கேள்விகளை முன் வைப்பதற்குள்ளாகவே, "பத்திரிகையில் கொடுத்த அறிவிப்பிலேயே எல்லாம் இருக்கிறது. நான் யாரையுமே அப்பாயின்மெண்ட் கொடுத்துவிட்டுத்தான் சந்திப்பது வழக்கம். இந்த அறிவிப்பைப் பொறுத்தவரையில் நான் எதையும் சொல்ல முடியாது. சட்டப்படியாகவே எல்லாம் நடக்கும். நீங்கள் கிளம்பலாம். வேறு எதுவும் பேச முடியாது'' என்றதோடு வழியனுப்பி வைத்தார்.
அங்கிருந்து கிளம்ப எத்தனிக்கையில் நமக்குத் தோன்றியது பெரியாரின் வாசகம் ஒன்று.
`இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ? இந்தப் பணியை யாரும் செய்ய முன்வராததால், நான் மேற்போட்டுக் கொண்டு செய்கிறேன்'.
இதை பெரியார் தி.க தொண்டர்களும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நன்றி; குமுதம் ரிப்போர்ட்டர்- -21-08-2008

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

மொழி

எனது நாடு எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால்! உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால்! உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது மொழி என்பதானது எனது லட்சியத்திற்கு-எனது மக்கள் முற்போக்கு அடைவதற்கு-மானத்தோடு வாழ்வதற்குப் பயன்படாது என்று கருதினால் உடனே அதி விட்டுவிட்டுப் பயனளிக்கக்கூடியதைப் பின்பற்றுவேன்.
-தந்தைபெரியார்

புதன், 13 ஆகஸ்ட், 2008

அழிவுப்பணி தேவையானதா?

எந்த ஒரு நல்ல உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட காரியத்திற்கும் நிர்மாண வேலை, நாச வேலை ஆகிய இரண்டும் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். நாச வேலையை விட்டுவிட்டு நிர்மாண வேலையை மாத்திரம்செய்தால் எதிர் சாதனங்கள் நிர்மாணத்தை அழித்துக் கொண்டே இருக்கும்.
-தந்தைபெரியார்

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

அரசியல்

நம் நாட்டு அரசியல் துறையில் இவ்வளவு அயோக்கியர்களும் அயோக்கியத் தனங்களும் தோன்றவும் குடி கொள்ளவும் காரணம், அரசியல் குற்றவாளிகள் என்று ஒரு அயோக்கியப் பிரிவை உண்டாக்கிக் குற்றவாளிகளுக்குக் கட்டில், மெத்தை, மேசை, நாற்காலி, பீரோ, சோப்பு, சீப்பு, கண்ணாடி கொடுத்து அவர்களுக்குப் பச்சரிசி, நெய், தயிர், சீமைக் காய்கறி, மாமிசம் முதலியவை கொடுத்து, அவனது உடல் எடையை உயர்த்தி மரியாதை செய்து வந்த காரணத்தினாலேயே, ஒரு யோக்கியன் கூட அரசியலில் இருக்க முடியாத அளவுக்கு அயோக்கியர்களே அதைக் கைப்பற்றி விட்டார்கள்.

-தந்தை பெரியார்

சனி, 9 ஆகஸ்ட், 2008

நமது இழிவு நீங்கி மேம்பாடடைய...

நமது சமுதாயத்தில் உள்ள ஒரு பெரிய குறை நமக் கென்று நமது இனத்திற் கென்று ஒரு தாபனம்,ஒரு தலைவன் இல்லாததே யாகும். எந்த உத்தியோகம் பார்த்தாலும் எந்தக் கொள்கை உடையவர்களாக இருப்பினும், எந்தச் சாதியைச் சார்ந்தவராக இருப்பினும் எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், தமிழன் என்றால் எல்லோரும் ஒன்றாகக் கூட வேண்டும். அதில் எந்தக் கருத்து வேறுபாட்டிற்கும் இடம் இருக்கக்கூடாது. ஆகவே தமிழர்கள் யாவரும் ஒன்று கூடும்படியான ஒரு தாபனம் வேண்டும் அதைத் துவக்க நீங்கள் முயற்சி எடுத்துக்கொள்ளவெண்டும். அந்த தாபனத்தில் தமிழர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக்க வேண்டும் அதற்குத் தமிழர் முன்னேற்றத் தாபனம் என்றோ, ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றத்தாபனம் என்றோ ஏதோ ஒரு பெயர் வைத்துக்கொண்டு தமிழர் அனைவரையும் அதில் உறுப்பினராக்க வேண்டும். தமிழர்களுக்கு எற்படும் குறைகளை அதன் மூலம் போக்கிக் கொள்ள முற்பட வேண்டும்.

-தந்தை பெரியார்

பிள்ளை குட்டித் தொல்லை ஒழிய

சொத்தெல்லாம் [பொதுவழி]சர்க்காருடையது என்று ஆக்கப்பட்டு விட்டால் பிள்ளை குட்டி வேண்டும் என்ற ஆசையும்,அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையும் மனிதனுக்கு வரவே வராது. தனி உடமை ஒழிந்துவிட்டால் வாரிசுரிமை என்கின்ற பிரச்சினைக்கே இடமில்லை. புதையல் எடுக்கும் பொருள் எப்படி அரசாங்கத்திற்குச் சொந்தமோ அது போலவே குழந்தைகள் பிறந்த பின் அவைகளையும் அரசங்கத்தின் சொந்த சொத்தாகவே கருதி அரசாங்கம் அவர்களை எடுத்துக் கொள்ளவேண்டும் பிள்ளைகளை காக்கவேண்டுமே-படிப்பு கொடுக்கவேண்டுமே-வேலை தேடித்தரவேண்டுமே என்ற கவலை எல்லாம் பெற்றோர்களுக்கு அறவே கூடாது அவற்றை எல்லாம் அரசாங்கமே பார்த்துக்கொள்ளவெண்டும்.
['பெரியார் ஒரு வாழ்க்கை நெறி' என்ற நூலிலிருந்து]

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

பத்திரிக்கை நிருபர்

உலகத்திலேயே மானங்கெட்ட மக்களில் நெ.1 இந்த பத்திரிக்கை நிருபர்கள் தான். எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமோ அவ்வளவு அயோக்கியத்தனங்களையும் செய்கிறார்கள். எல்லாப் பத்திரிக்கைகளும் பார்ப்பனப் பத்திரிக்கைகள்-அவர்கள் அடிமைப் பத்திரிக்கைகள் தான்; நிருபர் கள் எவனையெடுத்தாலும் பார்ப்பன நிருபர்கள்தான் வருவார்கள். நம்மிடம் பேசும் போது நாமொன்று சொன்னால் அதைத் திருத்தி விஷமத்தனமாக பிரசுரிப்பார்கள். நம்மவன் பத்திரிக்கை நடத்துகிறான் என்றாலும்,அவன் என்னமோ பார்ப்பானுக்கேதான் பிறந்ததாகக் கருதிக் கொண்டு பார்ப்பன நலனுக்கு ஆன பத்திரிக்கையாகவே நடத்துகிறான். பார்ப்பனர்களையே வைத்து அவர்களிஷ்டப்படி நடத்துகிறான்.
-தந்தைபெரியார்

புதன், 6 ஆகஸ்ட், 2008

பத்திரிகைகள்

தற்போது பத்திரிகைகள் யாவும் பார்ப்பானிடமும், பணக்காரனிடமும்,பார்ப்பானின் அடிமைகளிடமும் சிக்கிவிட்டதால் புரட்டு, பித்தலாட்டங்கள்மூலம் மனிதனை மடையர்களாக்கவே முயற்சிக்கின்றன; பாடுபடுகின்றன.அவற்றிற்கு முட்டாளுடைய, மூடநம்பிக்கைக்காரனுடைய, அயோக்கியனுடைய ஆதரவு அதிகமிருப்பதால் அவைகள் தாம் அதிகம்விற்பனையாகின்றன, பாமர மக்களிடையே பரவுகின்றன.மனிதனின் அறிவையும் சிந்தனையையும் வளர்க்கக் கூடிய பத்திரிகைகள்ஒன்றிரண்டும் இருக்கின்றன என்றாலும் மக்கள் அவைகளைவிரும்புவது இல்லை.


- தந்தைபெரியார்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

பத்திரிக்கைத்தொண்டு

கடவுள் தொண்டு செய்யும் பெண்களின் தொண்டு நம்நாட்டில் விபச்சாரிகள் வசம் இருந்தது போல மக்களுக்குத் தொண்டு செய்யும் பத்திரிக்கைத் தொழில் பெரிதும் நம்நாட்டில் மாபெரும் அயோக்கியர்கள் வசமே அண்டி நிற்கிறது விபச்சாரிகளால் செய்யப்படும் கடவுள் தொண்டு பொதுமக்களை ஒழுக்கக்கேடர்கள்,நாணயக்கேடர்களாக ஆக்குவது போலவே,அதைவிட அதிகமாக அயோக்கியர்களால் நடத்தப்படும்பத்திரிக்கைத் தொண்டும்,பொதுமக்களை நாணயக்கேடு,ஒழுக்கக்கேடு உள்ளவர்களாக ஆக்கி விடுகிறது.
தந்தைபெரியார்

பொருளாதாரம்

இன்றைய அமைப்பில் கையில் காசில்லாவிட்டால் மனிதன் பெரிதும் யோக்கியனாகக் கூட நடந்து கொள்ள முடியாது. மனிதன் துரோகி, நம்பிக்கை மோசக்காரன்,அயோக்கியன் ஆவதற்குக் காசில்லாக் கொடுமையும், காசு ஆசையும்தான் காரணம் ஆனதால் நல்லமுறையில் கொஞ்சக் காசு சம்பாதித்தாலும் அதைப் பத்திரப்படுத்தி வைத்தால் சிரமப்படவோ தவறாக நடந்துகொள்ளவோ வேண்டியதில்லை.
தந்தைபெரியார்
[விடுதலை 12-07-55]

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

பொதுத்தொண்டு

மனிதன் மற்ற மிருகங்களைப்போல் அல்லாமல் மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான்.சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும்,மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழ வேண்டும்.மனிதன் எவ்விதத்திலாவது சமுதாயத்திற்கு பயன்பட்டுத்தான் தீரவேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும் அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்கு கேடாக வாழ்வதென்றால் எதற்க்காக வாழ வேண்டும்.
-தந்தைபெரியார்

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

இழிதன்மை

நம் வீட்டுக்குள் அந்நியன்புகுந்து கொண்டதோடல்லாது ,அவன் நம் எஜமான் என்றால் _நமக்கு இதை விட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்.
-தந்தைபெரியார்

திருந்த மாட்டானா?

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் ரஜினியின் உண்மையான குணம் வெளிப்பட்டு விட்டது... கன்னடனின் உணர்வை பார்த்த பிறகும், ரஜினியின் உண்மை முகம் தெரிந்த பிறகும்...இனியாவது..அதிகாலை 4 மணிக்கு தியேட்டருக்கு போய் ரஜினி படம் பார்க்க தவம் கிடக்கும்இழி பிறவி தமிழன் திருந்த மாட்டானா?
ஏக்கத்தோடு எதிர்பார்க்கும்
-ஏமாளித்தமிழன்

வலைப்பதிவு காப்பகம்