செவ்வாய், 3 மார்ச், 2009

விலங்கிடுவது கைக்கா? வாய்க்கா?

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் தேதிகள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இனி, தேர்தல் திருவிழா கனஜோரில் தொடங்கிவிடும்.

தமிழகத்தில் வரும் மே 13ஆம் தேதியன்று, இறுதி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், தேர்தல் களத்தை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு சற்று அவகாசம் கிடைத்துள்ளது. 

இனி வரும் நாட்களில் கோடை வெயிலுடன் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் களமும் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். இந்தப் பரப்பில் இலங்கை தமிழர் பிரசனையை நமது அரசியல் கட்சிகள் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிடும். (அடுத்ததாக தேர்தல் வரும் போதுதானே அவர்களுக்கு இந்த 'ஆயுதம்' தேவைப்படும்.)

உண்ணாவிரதம், மனிதச் சங்கிலிப் போராட்டம், முத்துகுமாரர்களின் மரணம் எல்லாம் தேர்தல் களேபரத்தில் காணாமல் போய்விடும். 

ஆயினும் ஈழத்தின்பால் உண்மையான பற்றுள்ள சில தலைவர்கள், தேர்தல் பிரச்சாரத்தையும் மீறி இலங்கை விவகாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்களோ என்ற அச்சம் தமிழக அரசுக்கு உள்ளது. 

காரணம், இத்தேர்தலில் இலங்கை விவகாரம் நிச்சயம் தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆளும் தி.மு.க.வும் காங்கிரஸும் நன்கு உணர்ந்துள்ளன. அதன் எதிரொலியாகத் தான் தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுக்குக் கூட வலைவீசப் பார்க்கிறது காங்கிரஸ்.

உலகத் தமிழர்களுக்கே தான் மட்டும் தான் நம்பகமான ஒரே தலைவர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க.வோ, ஈழப் பிரச்னையால் கணிசமான வாக்குகளை இழக்க நேரிடலாம் என்ற அச்சத்தில் உள்ளது. 

எனவே, இலங்கை விவகாரத்தை தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொண்டு போகக் கூடாது என்பதில் அது உறுதியாக உள்ளது. அதற்காக அறிவிக்கப்படாத கைது நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பி வரும் இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த தமிழக அரசு, அதன் பிறகு வைகோவையும் கைது செய்து உள்ளே தள்ளியது. (அவர் தற்போது பிணைய விடுதலையில் வெளியே வந்துவிட்டார் என்பது வேறு விஷயம்) வைகோ மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயலாம் என்றே கூறப்படுகிறது.

இத்துடன் நிற்கவில்லை. திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில், தே‌சிய ஒருமை‌‌ப்பா‌ட்டு‌க்கு‌ எதிராகப் பே‌சியதாக, பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியையும் கைது செய்து 'உள்ளே' வைத்துவிட்டது தமிழக அரசு. 

தமிழக காவல்துறையினர் விலங்கிடுவது தலைவர்களின் கைகளுக்கா? அல்லது அவர்களின் வாய்க்கா? அடுத்த கைது யார்? பழ. நெடுமாறனா? அல்லது தொல் திருமாவளவனா? 

-வெப்துனியா

சனி, 21 பிப்ரவரி, 2009

யாரா இருக்கும் அது?





hc-clash26




’தமிழக அரசுக்கு எதிராக சதி’ முதல்வர் அறிக்கை

  • தமிழகம் முழுவதும் ஏற்பட்ட, மின்சார தட்டுப்பாட்டால், பொது மக்கள் பெரும் அவதி. பல சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டன.பல தொழிலாளர்கள் வேலை இழப்பு.
  • உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு.

  • வீட்டு வாடகை, நிலம், கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதி.
  • டாஸ்மாக் மதுக்கடைகளினால் பல குடும்பங்கள் சீரழிவு.

  • அரசு பேருந்துகளில் மறைமுக விலையேற்றம்.
  • ராஜா என்கிற தமிழக அமைச்சர், ஈரோட்டில் நிலமோசடி வழக்கில் ஈடுப்பட்டார், என்பதால் அமைச்சர் பதவி பறிப்பு.
  • திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தில் தேசிய ஊரக உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த மக்கள், முறையான கூலி கேட்டு மறியல் செய்த போது அவர்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு.

  • ஈழத் தமிழர்களை கொலை செய்யும், சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு உதவி. தமிழர்கள் தீக்குளிப்பு. தமிழகம் கொந்தளிப்பு.  தமிழகஅரசின் மெத்தனம்.

  • ‘ஈழத்தமிழர்களுக்கு எதிரானப் போரை நிறுத்து’ என்ற பொதுநோக்கில் தங்கள் நலன்களைப் புறம் தள்ளி தமிழர்களுக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது தமிழக போலிசாரின் கொலைவெறித் தாக்குதல். படுகாயமுற்ற வழக்கறிஞர்கள் மீதே, கொலை முயற்சி வழக்கு.

ஆமாம், யாரா இருக்கும் அது?

அதாங்க, முதல்வர் சொல்லி இருக்கிறாரே,  ‘தமிழக அரசுக்கு எதிராக சதி பண்றாங்க’ என்று.  அதுதான் யாருன்னு தெரியிலையே?

-வே. மதிமாறன்

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் - தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது...



அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். மனம் போனபடி, பழித்தான், சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தணடித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினப் போர் நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தினான். அதைக்கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் ராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் - நாட்டு மக்களுள் அதாவது ராம ராஜ்ஜியத்தல் யரோ ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று ராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றிவந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனைநோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா-? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத்தவம் செய்பவனா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவிவிட்டான் ராமன். அதே நொடியில் எங்கே தொலை தூரத்து அயோத்தியில் அகாலமரணமைடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்களெல்லாம் மன்னன், ராமனின் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். ……………………………………………. சம்பூகனை கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் ராமனுக்குப் பரிசாய் அளித்தான்.’ - அயோத்தியில் நடந்த ராமனின் ஆட்சியைப் பற்றி டாக்டர் அம்பேத்கர். *** ‘சுப்பிரமணிய சுவாமி என்கிற ஒரு பார்ப்பனர், தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார் என்பதால் சில வழக்கறிஞர்கள் அவரை அடித்துவிட்டார்கள்’ என்று சொல்லப்பட்டது. உடனே, பார்ப்பனப் பத்திரிகைகள், பார்ப்பன ஆதரவாளர்கள், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்த ஆட்சியில் யாருக்கும் (பார்ப்பனர்களுக்கு) பாதுகாப்பில்லை. இந்த ஆட்சியை உடனடியான கலைக்க வேண்டும்.” என்று மனம் போனபடி, பழித்தார்கள், சபித்தார்கள். மருத்துவனையில் இருக்கும் முதல்வர் சு. சுவாமி என்கிற ஒரு பார்ப்பனர் மீது நடந்த தாக்குதலை நினைத்து மிகவும் மனம் வருந்தி, தனது அறிவார்ந்த குழுக்களிடம், கலந்தாலோசித்து இருக்கிறார். பிறகு அதன் விளைவு, சென்னை உயர்நீதி மன்றத்தில், சரியாக மூன்று மணிக்கு ஆரம்பித்திருக்கிறது. சுப்பிரமணிய சுவாமியை உண்மையில் தாக்கினார்களா? தாக்கியது இந்த வக்கீல்கள்தானா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி ஏறக்குறை 1000 அதிரடி ‘காவல்’ துறையினரால், வழக்கறிஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்டார்கள். தலை, கால், கை உடைந்து பல வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் கிடத்தப்பட்டார்கள். வழக்கறிஞர்களைத் தாக்கிய ‘காவல் துறை’ யின் இந்த ‘நற்செயலை’ பார்ப்பனப் பத்திரிகைகள், பார்ப்பன ஆதரவாளர்கள் பாராட்டி மலர் தூவி வாழ்த்துகிறார்கள். சம்பூகனை கொன்றதும் உயர்தெழுந்த பார்ப்பனச் சிறுவனைப் போல், வழக்கறிஞர்கள் மீது போலீஸ் கொலை வெறி தாக்குதல் நடத்தி முடித்த உடன், சுப்பிரமணிய சுவாமி, மகிழ்ச்சி அடைந்து, காவல்துறையின் ‘நற்செயலை’ பாராட்டியும், வழக்கறிஞர்களை ‘மாமா பயல்கள்’ என்றும் என்று கண்ணியமான வார்த்தையாலும் பேசியிருக்கிறார்.(சி.என்.என். தொலைக்காட்சி) நடிகர் ‘சோ’ அகத்தியனைப்போல் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். தெய்வ மகிமையுள்ள 


காப்பை முதல்வரின் கையில், கட்டுவாரா? தெரியவில்லை. ராமாயண ஆட்சி அல்லது காட்சி மீண்டும் நடந்திருக்கிறது சில ஆண்டுகளுக்கு முன்னால், முதல்வர் ஸ்ரீராமனை, கடுமையாக விமர்சித்துவிட்டார் என்று வேதாந்தி என்கிறவன், அவர் தலையை வெட்டச் சொன்னான். ஸ்ரீராமன், தன்னை தானே விமர்சித்து பேசிக் கொள்வதற்குக்கூடவா உரிமையில்லை. சாட்சாத் ஸ்ரீராமபிரான்தான் தமிழகத்து முதல்வராக இருக்கிறார். முட்டாள் வேதாந்தி. நீ என்ன ராம பக்தன்?. -வே. மதிமாறன் 

திங்கள், 16 பிப்ரவரி, 2009

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்


mc21


mc11

ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வீழ்த்துவோம் என்று சென்னையில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் உறுதி ஏற்றனர்.
ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து வீரச்சாவடைந்த “வீரத் தமிழ் மகன்” முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.

“தேனிசை” செல்லப்பா எழுச்சி இசையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் “விடுதலை” இராசேந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் அமர்நாத், இயக்குநர் சீமான் ஆகியோர் உரையாற்றினர்.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்தினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரையில்,

இந்திய இராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈழத்தில் கொன்று குவிப்பதற்கு ராஜீவ் காரணமாக இருந்ததையும், ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்குப் பிறகு கொழும்பு சென்ற ராஜீவ் காந்தியை சிங்கள சிப்பாய் ஒருவன் துப்பாக்கி கட்டையால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததையும் எடுத்துக் காட்டினார்.

தமிழர்களின் உரிமைகளைக் காக்கக்கூடிய ஒரு அரசு தமிழ்நாட்டில் இல்லை என்றும், யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக சட்டமன்றம் டெல்லிக்கு கொத்தடிமை சேவை செய்யும் அதிகாரமற்ற மன்றமே என்றும் தோழர் மணியரசன் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டின் உணர்வுகளையும் உரிமைகளையும் காப்பதற்குத்தான் டில்லிக்கு அனுப்பினோமே தவிர, டில்லியின் துரோகத்தை தமிழ்நாட்டில் நியாயப்படுத்துவதற்கு அல்ல என்றும், காங்கிரசின் துரோகத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதே இனி தமிழின உணர்வாளர்களின் எதிர்கால வேலைத் திட்டம் என்று கூட்டத்தில் தலைவர்கள் அறிவித்தபோது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஆரவாரம், கரவொலி எழுப்பியதோடு காங்கிரசை வீழ்த்துவோம் என்று முழக்கமிட்டனர்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில்,

ராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை பட்டியலிட்டுக் கூறியபோது கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர்.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் “விடுதலை” இராசேந்திரன் ஆற்றிய உரையில்,

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டினார்.

ஈழப் போராளி அமைப்புகளிடையே மோதல்களை உருவாக்கியது இந்திய உளவு நிறுவனம் தான் என்றும், இதை 1990 ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத்தில் அறிவித்த முதலமைச்சர் கலைஞர், இப்போது விடுதலைப் புலிகள் சகோதர போர் நடத்துவதாக குற்றம் சாட்டுவது முரண்பாடு அல்லவா என்று கேட்டார்.

தமிழர் வரிப்பணத்தில் சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவோம் என்று  கேட்டுக் கொண்டார்.

திரைப்பட இயக்குனர் சீமான் ஆற்றிய உரையில்,

எத்தனை முறை கைது செய்தாலும் சீமானின் குரலை நசுக்கி விட முடியாது. தமிழர்களின் ஒரே பாதுகாப்பு அரணாக விளங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக தனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.

இரு நாட்களுக்கு முன் புதுவையில் இயக்குனர் சீமான் ஆற்றிய உரைக்காக புதுவை காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரப்பரப்புக்கு இடையே கூட்டம் நடைபெற்றது.

அதே நாளில் சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூட்டமும் நடைபெற்றது. பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்து நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் திரண்டவர்களை விட ஐந்து மடங்கு கூட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் கூட்டத்துக்கு திரண்டதாக “விண்” தொலைக்காட்சி தனது செய்தி ஆய்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி.

http://www.paristamil.com/tamilnews/?p=28280
 

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமானின் ஆவேச பேச்சு



ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் செயலாளர் பெ.மணியரசன், விடுதலை ராஜேந்திரன், திரைப்பட இயக்குனர் சீமான் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. 

கார் எரிக்கிற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று என்னை கைது செய்பவர்கள், என்னுடைய காரை எரித்தவர்களை, இந்திய கம்யூனிஸ்ட் அய்யா தா.பாண்டியன் அவர்களின் காரை எரித்தவர்களை கைது செய்யாதது ஏன்?

நான் கலவரம் செய்வதாக புதுச்சேரி அரசு சொல்கிறது. கலகக்காரர் பெரியாரின் பேரன் நான். தமிழின எழுச்சிக்காக கலகத்தைச் செய்தேன். தமிழர்கள் ஜனநாயக வாதிகளாக இருக்கிறார்கள். முத்துக்குமாரும் ஜனநாயக வாதியாகத்தான் இருந்திருக்கிறான். அதனால்தான் தீக்குளித்தான். ஆனால் நாடு சொல்கிறது தமிழன் தீவிரவாதி என்று. 

முத்துக்குமார் தீவிரவாதி, நான் தீவிரவாதி ஆனால் என் காரையும், தா.பாண்டியன் காரையும் எரித்த காங்கிரஸ்காரன் தேசியவாதி. 

தமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். 

இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்? 

இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது. 

புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு. 

7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும். 

உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள். 

எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார். 


நன்றி. நக்கீரன் இணையம்

http://www.nakkheeran.in

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ’ யை!


முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ’ யை!

ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்கிற, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே புள்ளியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்ற அழைக்கிற அளவிற்கு இதுவரை ஒரு கட்டுரையும் எழுதப்பட்டதில்லை. ஆனால், முத்துக்குமாரின் கட்டுரை வடிவில் அமைந்திருக்கிற அந்த நான்கு பக்கக் கடிதம், அதை செய்திருக்கிறது. அதை நிரூபித்தது போல், அவரின் எழுச்சிமிகு இறுதி ஊர்வலத்தில் பல்வேறு இயக்கங்களும், மக்களும் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை எழுச்சியோடு பதிவு செய்தனர். ஈழத்தமிழர்களுக்காக ‘முத்துக்குமார் நடத்திய அந்த எழுச்சிமிகு அணிவகுப்பில்‘ கலந்துக் கொண்டதை, என்னுடைய தகுதியாக, என் அரசியல் நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தா ஒன்றாக, மிகப் பெருமையோடு கருதுகிறேன். ஏனோதானோ என்றோ, அல்லது தன்னைப் பெரிய அறிவாளியாக, எழுத்தாளனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றோ பல மேற்கோள்களைக் காட்டி, படிப்பவனை மிரட்டி நானூறு பக்கங்களுக்கும் மிகாமல், ‘பெரும் குறிப்பு‘ வரைகிற எழுத்தாளர்கள் மத்தியில், நான்கே பக்கத்தில், தனது முதல் எழுத்திலேயே, வெறும் துண்டு பிரசுரத்தில் ஓர் இரவுக்குள் தமிழகத்தையே தலைகீழாகப் புரட்டி விட்டார் முத்துக்குமார். தான் கொண்ட கொள்கையின் மீது அர்ப்பணிப்பும், உண்மையும், துணிவும், தியாக உள்ளமும் இருந்தால், நானூறு பக்கங்கள் அல்ல, நாலே வார்த்தையில் கூட மக்களை தட்டி எழுப்ப முடியும் என்பதற்கு முத்துக்குமாரின் ‘உயில்‘ ஒரு சாட்சி. நமக்கு பாடம். *** அரசியல் அலசல் கொண்ட கட்டுரையை, கடிதத்தை மிகச் சிறப்பாக எழுதுவது, முயன்றால் எல்லோருக்கும் முடிகிற காரியம்தான் என்றாலும், மரணத்தை முடிவு செய்துவிட்டு, எழுதச் சொல்லுங்கள், அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும், அவருக்கு ஒண்ணாவது வாய்பாடைக் கூட ஒழங்காக எழுதவராது. தாய்நாட்டிற்காக, மரணத்தைக் கண்டு அஞ்சாத அந்தச் சிறப்பு இந்திய வரலாற்றில் மாவீரன் பகத்சிங்கிடம் இருந்தது. மறுநாள் காலையில் தூக்கு, இரவு லெனின் ‘அரசும் - புரட்சியும்‘ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறார் பகத். சிறைக்காவலர், “மன்னிப்பு எழுதிக் கொடுத்தால், தூக்கிலிருந்து தப்பலாமே” என்கிறார். பகத்சிங் சொல்கிறார், “என் மரணத்தைப் பார்த்து லட்சக் கணக்கான இளைஞர்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக போராட வருவார்கள். என் மரணம் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டு பண்ணும். அதற்காகவே நான் தூக்குகயிறை முத்தமிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தீவிரமாக லெனின் ‘அரசும் - புரட்சியும்‘ என்ற நூலைப் படித்திருக்கிறார் பகத். முத்துக்குமாரின் மிகச் சிறப்பும், பகத்சிங்கைப் போன்றே மரணத்தை மயிறளவுக்கூட மதிக்காததன்மைதான். தன் மரணத்தை முடிவு செய்துவிட்டு, மிகப் பெரிய அரசில் தீர்வை அலசி ஆராய்ந்து ஒவ்வொரு வார்த்தையிலும் நெருப்பு வைத்து எழுதியிருக்கிறார் தமிழகத்து பகத்சிங் முத்துக்குமார். அவர் வைத்துக் கொண்ட நெருப்பைவிடவும் அவர் வைத்த நெருப்பு, லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நெஞ்சில், ‘திகுதிகு‘ வென்று பற்றி சூராவளியாய் தமிழகம் முழுக்க சுற்றி அடிக்கிறது. தோழர்களே, முத்துக்குமாரின் அந்த நான்கு பக்க தீபந்தம், நம் கையில் இருக்கிறது. அந்த மாவீரன், மாமேதை முத்துக்குமார் நமக்கு வழிகாட்டிச் சென்றிருப்பது, நம்மை வருத்திக் கொள்ள, கொளுத்திக்கொள்ள அல்ல. தமிழனப் பகையை வருத்த, கொளுத்த. ஆம் தோழர்களே, முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ‘ யை. அந்தத் ‘தீ‘ ஈழத்தமிழர்களுக்கு எதிரான, தமிழனத்திற்கு எதிரான, வஞ்சிக்கப்படும் மக்களுக்கு எதிரான சதியைப் பற்ற வைப்பதற்காக மட்டுமே நமக்கு பயன்பட வேண்டும். அது ஒன்றுதான் முத்துக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான வீர வணக்கம். -வே. 

மதிமாறன்

வியாழன், 29 ஜனவரி, 2009

மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்.


அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.