புதன், 14 ஜனவரி, 2009

கிளிநொச்சி வீழ்ச்சி நிலையானதா?


தமிழீழம்தமிழர்களின் அரசியல் தலைநகரமாக கம்பீர மாக நின்ற கிளிநொச்சி, இப்போது ராணுவத்தின் பிடியில். இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்தபோது, சில நாய்கள் மட்டுமே தென்பட்டன. மக்கள் முழுதும் வெளியேறி விட்டார்கள். மக்களும் புலிப்படையும் இல்லாத மண்ணைப் பிடித்துள்ளது, சிங்கள ராணுவம்.கிளிநொச்சியின் வரலாறு என்ன? முதலாவது ஈழப்போரில் யாழ் மாவட்டம் முழுதும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கிளிநொச்சி நகரம் மட்டும் ராணுவத்தின் வசம் இருந்தது. இலங்கை ராணுவ தளபதி டென்சில் கொப்பேகடுவ - 1984 இல் கிளிநொச்சியில் முகாமிட்டு, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழி நடத்தி வந்தார். 1985 இல் கிளிநொச்சியில் ராணுவம் முகாமிட்டிருந்த காவல் நிலையத்தில் குண்டுகள் நிரப்பிய வாகனங்களை செலுத்தி, புலிகள் பெரும் தாக்குதலை நடத்தினர். ராஜீவ் காந்தி தமிழர்களைக் கொன்று குவிக்க அனுப்பி வைத்த இந்திய ராணுவமும், கிளிநொச்சியில் கடும் பாதிப்புகளை உருவாக்கியது. 
இந்திய ராணுவம் வெளியேறிய பிறகு, ஈழத்தில் இரண் டாம் கட்டப் போர் தொடங்கியது. கிளிநொச்சி யைப் பிடிக்க விடுதலைப்புலிகள் தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியபோது, இலங்கை ராணுவம் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி, ஆணையிறவுக்கு தப்பிச் சென்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப் பகுதியும் புலிகள் கட்டுப் பாட்டில் வந்தது.1996 இல் சந்திரிகா பிரதமராக இருந்தபோது கிளிநொச்சியை மீட்க 'சஞ்ஜெய' என்ற பெயரில் மூன்று கட்ட ராணுவ நடவடிக்கைகளை மேற் கொண்டார். கிளிநொச்சி மீண்டும் வரும் நிலையில் ஆக்கிர மிக்கப்பட்டது. 1997 இல் விடுதலைப் புலிகளின் கடற்படை வலிமை பெற்றது. ராணுவம் யாழ்ப்பாணக் கடல் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு புலிகள் தாக்குதல்கள் நடந்தன. எனவே யாழ்ப்பாணத்துக்கு தரைவழிப் பாதையைத் தேட ஆரம்பித்த ராணுவம், 'ஜெயசிங்குறு' என்ற ராணுவ தாக்குதலை மேற்கொண்டது. வவுனியாவி லிருந்து கிளிநொச்சி வரையுள்ள தரைவழிப் பாதையை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்பதே, இந்தத் தாக்குதல் நோக்கம். 'ஏ9' பாதை வழியாக ராணுவம் தாக்குதலுக்கு வந்தபோது, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளே அனுமதித்தனர். வழியிலுள்ள மாங்குளம் என்ற ஊரைக் கடந்து, கிளிநொச்சிக்கு ராணுவம் எதிர்ப்பே இன்றி நுழைந்து அங்கே முகாமிட்டது. ராணுவத்தின் மற்றொரு பிரிவு எதிர்ப்பே இன்றி மாங்குளம் வந்தது. உள்ளே நுழைய விட்டு ராணுவத்தினரை வெளியேற முடியாமல் சுற்றி வளைத்து, விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவம் பலத்த உயிர்ச் சேதத்துடன் பின்வாங்கி ஓடியது. புலிகள் நடத்தி அத்தாக்குதலுக்கு 'ஓயாத அலைகள்-2' என்று பெயர். 
மீண்டும் கிளிநொச்சி புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1999 நவம்பரில் விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் - 3 தாக்குதல் தொடங்கியது. ஆணையிறவு புலிகள் வசமானது. விமானப்படை, தரைப்படை, கப்பல் படை என்று முப்படையினரும் முகாமிட் டிருந்தும், ஆனை யிரவை ராணுவத்தால் தக்கவைக்க முடியவில்லை.இந்தியாவின் ராணுவ உதவிகள், ராணுவ பயிற்சிகள், ராணுவ ரீதியான ஆலோசனைகளோடு 'ராடார்' கருவிகளைப் பொருத்தி, உளவுத் தகவல்களையும் சிங்கள ராணுவத்துக்கு வழங்கி வரும் நிலையில் சீனா, பாகிஸ்தான், இந்தியாவின் ராணுவ உதவியோடு சிங்கள ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துள்ளது.இந்திய ராணுவம் சென்றிருந்தபோது விடுதலைப்புலிகள் இடம் பெயர்ந்த முல்லைத் தீவில் மீண்டும் புலிகள் மக்களோடு இடம் பெயர்ந்துள்ளனர்.

                                                         -நன்றி; பெரியார்முழக்கம்

வலைப்பதிவு காப்பகம்