வெள்ளி, 31 அக்டோபர், 2008

ஈழத் தமிழர்களும் சினிமாவின் அட்டைக் கத்தி வீரர்களும்

-
கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இலங்கை யுத்தத்தின் காரணமாக, இலங்கை வாழ் ஈழ மக்கள் மிக பெருவாரியாக ஈழத்திலிருந்து வெளியேறி, உலக நாடுகள் முழுக்க பரவினார்கள். அப்படி புலம் பெயர்ந்து மிகுந்த சிரமப்பட்டு ஒரு மரியாதைக்குரிய வாழக்கை நிலையை அமைத்துக் கொண்ட ஈழத்தமிழர்கள், தமிழகத்திலிருந்து இரண்டு மிக மோசமான விஷயங்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தார்கள்.
ஒன்று தமிழ் சினிமா.இரண்டு ஜோதிடம்.
உலகத்தின பல நாடுகளின் தியைரங்குகளில் தமிழ்சினிமா திரையிடப்பட்டதே, ஈழத் தமிழர்கள் உலகம் முழுக்க குடியேறிதற்குப் பிறகே. தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ‘பாடல் ஒலித்தகடு, திரையரங்கில் திரைப்படம் திரையீடு, திரைப்பட சிடி விற்பனை’ என்று பல கோடிகள், ஏறக்குறை 25 சதவீதம் ஈழத்தமிழர்களின் பாக்கெட்டில் இருந்துதான் பிடுங்கப் படுகிறது. இதுபோக இந்தத் தமிழ் சினிமாவின் ஊதாரிகள் பலருக்கு, இன்ப சுற்றுலா, நட்சத்திர இரவு (கலை நிழ்ச்சியாம்) என்று நிகழ்ச்சி நடத்தி அதில் வேறு பணம்.
அநேகமாக ஈழத்தில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடுகிற போராளிகளுக்கு இவர்கள் செய்த உதவிகளைவிட தமிழ் சினிமா ஊதாரிகளுக்கு இவர்கள் செய்த உதவிகள் நிச்சயம் அதிகம் இருக்கும்.
பெண்களை, தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேலமாக சித்தரிக்கும் - ஜோதிடம் என்கிற ஒரு மனிதகுல வீரோத மூடநம்பிக்கையின் மீது, தமிழக தமிழர்களைவிட ஆழ்ந்தப் பற்றுக் கொண்ட ஈழத் தமிழர்கள் பலர், தமிழ்நாட்டில் இருந்து பல ஜோதிடர்களை வெளிநாட்டிற்கு வரவைத்து அவர்களுக்கு ராஜ உபச்சாரம் செய்து, ஏரளாமான பணம் கொடுத்திருக்கிறார்கள். கொடுக்கிறார்கள்.
தமிழர்களின் பேராதரவின் காரணமாக பல ஜோதிடர்கள், ‘காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபேர’ என்று உலல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘ஈழம் எப்போது அமையும்?’ என்று போராளிகளை நம்புவதை விட, ஜோதிடர்களை நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.
ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை, ஈழத்தமிழர்களால் பெரும் லாபம் அடையும் மேற் சொன்ன இருவரும், வாய் திறந்து கருத்து சொல்லக் கூட மறுக்கிறார்கள்.
ஜோதிடர்கள் மோசடிப் பேர்வழிகள் என்பது நேரடியாக தெரிந்ததே. அவர்களுக்கு ‘நேரம் சரியில்லை’ என்று கூட புரிந்த கொள்ளலாம். ஆனால் சினிமாவையும் தாண்டி பல்வேறு சமூக பிரச்சினைகளில் அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்கிற சினிமாக்காரர்களை அப்படி ஒரே வார்த்தையால் வரையறுக்க முடியாது.
***
சினிமாக்காரர்களில் இயக்குநர் சீமான் முயற்சியால், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கலந்து கொண்டவர்களைத் தவிர, வேறு யாரும் தன்னிச்சையாய் அறிக்கைக் கூட தரவில்லை. (இயக்குநர் மணிரத்தினம் இதிலும் கலந்து கொள்ளவில்லை.)
நடிகர்கள் அதிலும் குறிப்பாக நாடாள ஆசைப்படும் நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முத்திய அல்லது மூத்த நடிகர்கள் யாரும் சுயமாக வாய் திறக்கவில்லை. சாதாரண விஷயத்திற்குக்கூட ஊர் நியாயம் பேசுகிற இவர்கள், தமிழர்கள் தாக்கப்படுவதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட கண்டிக்கவில்லை.
ஒக்கேனேக்கல் விவகாரத்தில் சத்யராஜ் பேச்சை, ஏளனம் செய்து, நாகரீகமற்ற பேச்சாக கண்டித்து, ‘வன்முறை தீர்வாகாது. அவர்களை போல் நாம் நடந்து கொள்ளக்கூடாது.’ என்று ஜென்டில்மேன் போல் வசனம் பேசினார் கமல்ஹாசன். அதற்கு முன்பு தன்னுடைய ‘ஹேராம்’ திரைப்படம் வெளியானபோது, திருட்டு விசிடியை எதிர்த்து சென்னை பாரிமுனையில் ரோட்டில் இறங்கி ‘துணிச்சலாக’ சண்டை போட்டவர்தான் இவர். இந்த மிஸ்டர் கிளினும் நாகரிகமான முறையில் கூட தனது கண்டனத்தை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தெரிவிக்கவில்லை.
கர்நாடகத்தை ஒரு பெரிய ‘மார்க்கெட்டாக’ நினைத்து நடுக்குகிற இந்த நடிகர்கள், அதைவிட மிகப் பெரிய அளவில் தமிழர்களிடம் வர்த்தகம் நடத்திக் கொண்டே, தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு கண்டனத்தை கொடுக்கக் கூட தயங்குகிறார்கள் இந்த அட்டைக் கத்தி வீரர்கள்.
இந்த டூப் நாயகர்கள், கும்பல் கூடி நவம்பர் 1 அன்று ஊமைபோல் இவர்கள் இருக்கபோகும் அடையாள உண்ணாவிரதம், இவர்களின் நடிப்புத் திறமைக்கு சிறந்த சான்றாகத்தான் இருக்கும்.
ஈழத் தமிழர்களின் பிரச்சினையிலும் நடிகர்களாக நடந்து கொள்ளும் இவர்களின் படங்களை வாங்கி இனி திரையிடுவதில்லை, இவர்களை அழைத்து இனி ‘கலை’ நிகழ்சிகள் நடத்துவதில்லை என்று உலகெங்கும் வாழம் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக மலேசியாவில் உள்ள தமிழர்களும் இந்த எதிர்ப்பில் இணைந்து கொள்ள வேண்டும். இன்ப சுற்றுலாவிற்கும், படப்பிடிப்பிற்கும் வரும் இவர்களை அங்கிருந்த விரட்ட வேண்டும். இது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள், தன் தாயக ஈழத்தமிழர்களுக்கு செய்யும் பேருதவியாகத்தான் கருத்தப்படும். இந்தப் பேருதவியை செய்வார்களா ? அல்லது ரஜினியின் எந்திரனுக்காக காத்திருப்பார்களா? அல்லது ஜோதிடர்களை கேட்டு முடிவெடுப்பார்களா? பார்ப்போம்.

-வே. மதிமாறன்

வலைப்பதிவு காப்பகம்